இந்த நாவலுக்கு முன்பு ஸூஃபிப் பள்ளியின் குரு-சீடர் உறவை வரைந்து காட்டிய ஒரு நாவல் தமிழில் வந்ததில்லை. அவ்வகையில் தமிழுக்கு இந்த நாவல் ஒரு புதிய திறப்பு, ஒரு முன்னோடி, இந்நாவல் வெளியாகி இருபது ஆண்டுகள் ஆகியிருக்கும் இத்தருணத்திலும் இந்தப் பொருண்மையில் இன்னொரு நாவல் தமிழில் எழுதப்படவில்லை என்னும் நிலையே நீடிக்கிறது.
உண்மையான ஞானிகளைச் சந்திப்பது அரிதினும் அரிது. அத்தகையோரைச் சரியாக இனம்கண்டு, அவர்களின் போதனைகளைப் பின்பற்றுவது எளிதாக இருப்பதில்லை. அப்படி ஒரு உண்மை ஞானியைச் சந்தித்த ஒரு மனிதனைப் பற்றியும், அவனுக்கு அவர் எப்படி குருவானார், உண்மைகளின் பின்னால் மறைந்து நிற்கின்ற உண்மையான உண்மையை எப்படி அடையாளம் காட்டினார். அதை அவன் கண்டுகொண்டானா என்பதுதான் கதை.